இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உஷார்... தென்னையை தாக்கும் புதிய எதிரி!

ஈரியோபைட் தாக்குதலில் தென்னை விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில், தற்போது தென்னையை புதிய பூச்சி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இதன் தாக்கம் இல்லையென்றாலும், இலங்கை, மாலத் தீவு வழியாக தென்னிந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தென்னையின் குருத்து ஓலைகளைத் தாக்கும் இந்த தென்னை இலை வண்டின் தாக்குதல், இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மியான்மர், சீனா, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் மாலத் தீவிலும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். தென்னை இலை வண்டு குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் வேளாண் துறை களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.



"பப்பாளி மாவுப்பூச்சி, கரும்பில் அசுவுணி தென்னையில் ஈரியோபைட், சிலந்தி போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த பூச்சிகளால் பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னை இலைத் தண்டு பூச்சி தாக்குதல் வர வாய்ப்பு உள்ளது' என்று வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப.முருகேச பூபதி தெரிவித்தார்.



"தென்னையைத் தாக்கும் இலை வண்டு அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த வண்டு இளம் கன்றுகளை தொடர்ச்சியாகத் தாக்கினால், தென்னங்கன்றுகள் பட்டுப்போய்விடும். எண்ணெய் பனை, பனைமரம், பாக்குமரன், ராயல் பனை, சீனா விசிறி பனை, கலிபோர்னியா விசிறி பனை போன்ற தென்னை குடும்பத்தைச் சேர்ந்த 20 வகையான பயிர்களைத் தாக்கக் கூடியது' என்று பெங்களூரைச் சேர்ந்த வேளாண்சார் பூச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆர்.ஜே.ரபீந்திரா. காவி கலந்த சிவப்பு நிறம் உடைய இந்த வண்டு தென்னை ஓலைகளில் வாழ்க்கை நடத்துகிறது.



இதன் பருவ காலம் 5-லிருந்து 7 வாரங்கள். இரவில் மட்டுமே தென்னை மரங்களைத் தாக்கும் இயல்புடையது. வளர்ந்த வண்டுகள் 3 மாதம் வரை உயிர் வாழக்கூடியது. இதன் புழு மற்றும் வண்டு பருவத்தில் இலைகள் மற்றும் குருத்தோலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ரினம் மாறி கருகி காணப்படும்.


இதன் தாக்குதல் 8 ஓலைகளில் இருந்தாலே மகசூல் பாதிக்கும். இந்த வண்டு 10 வயதுடைய தென்னை மரங்களை அதிகமாக தாக்குகிறது. இதனால் மகசூல் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. தாக்கப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் தாக்கப்பட்ட அலங்கார பனைகளை இறக்குமதி செய்யும்போது இந்த வண்டுகள் பரவ வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இப்பூச்சி தென்பட்டால் உடனடியாக வேளாண் அலுவலகம் அல்லது வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


நன்றி :தினமணி

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment