இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கோபியில் முதல் போகம்: நெல் நடவு பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம் கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக நெல் நாற்று நடும் பணி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பவானிசாகர் அணை மற்றும் கொடிவேரி அணையில் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதி முதல் போக சாகுபடிக்காக 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து உபகிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நடப்பாண்டு நெல், மஞ்சள் மற்றும் கரும்புக்கு தற்போது நல்ல விலை கிடைக்கிறது. இதனால், பல ஆண்டுகளுக்கு பின், அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் மொத்தமுள்ள 24 ஆயிரம் ஏக்கரில் 90 சதவீதம் நிலங்களில் நெல், கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி பணி தீவிரமாக துவங்கியுள்ளது. கோபி- அந்தியூர் ரோடு, பங்களாப்புதூர் ரோடுகளின் இருபுறமும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் நாற்று நடும் பணி துவங்கியுள்ளது. வழக்கமாக கோபி பகுதியில் விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கோபிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

முதல் போக சாகுபடிக்கு ஏ.எஸ்.டி., 16 விதை நெல்லை தவிர மற்ற விதை நெல் ரகங்கள், உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதாக விவசாயத் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதனால், கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், முதல்போக சாகுபடிக்காக முழுவீச்சில் விவசாயப் பணிகளில் இறங்கியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் கோபி பகுதியில் நெல் நாற்று நடும் பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் கண்ணுக்கு குளிர்ச்சியாக, மனதுக்கு இதமாக பச்சைப் புடவை போர்த்தியது போல் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் காட்சியளிக்கும்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment