இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயிகளுக்காக 2 நியமன எம்.எல்.ஏ.கள்'

தமிழக சட்டமன்றத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை கவனிக்கும் வகையில் இரண்டு உறுப்பினர்களை நியமிக்கவகைசெய்யவேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

பாமகவின் 8வது நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் நேற்று வெளியிட்டுப் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாசு, இக்கருத்தை தெரிவித்தார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தேசிய விவசாயிகள் கழகத்தின் சார்பில் இரண்டு பிரதிநிதிகளை நியமித்து அவர்களின் ஆலோசனைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதைப் போல தமிழகத்திலும் பதிவுசெய்யப்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மூலம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ராமதாசு கூறினார்.

பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில், '' 2008௨009-ம் ஆண்டில் இருந்து வேளாண்மைக்காக தனியாக நிழல் நிதிநிலை அறிக்கை தயாரித்து வெளியிடுகிறோம். 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் நிழல் பட்ஜெட்டை வெளியிடுகிறோம். விவசாயத்திற்காக மொத்தம் ரூ.7,030 கோடி அளவில் இந்த திட்டங்களை செயல்படுத்தலாம்.

வேளாண் வளர்ச்சி, கடந்த சில ஆண்டுகளாகவே 2 சதவீதம் அளவிலே இருந்து வருகிறது. அதை 4 சதவீதமாக அதிகரித்தால் விவசாயம் மேம்படும். விவசாயிகள் வேலை தேடி கிராமபுறத்தில் இருந்து நகர் புறத்துக்கு வர மாட்டார்கள். உழவர் ஊதியக்குழு அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்பட வேண்டும். விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயி மற்றும் விவசாய தொழிலாளியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வருமானம் நிச்சயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

நவீன வேளாண்முறைகள், நிலவளம் காத்தல், தானியங்கள் உற்பத்தி, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி, கடல் விவசாயம், மீன் வளர்ப்பு கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி, பண்ணைக்காடுகள் பராமரிப்பு, அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம், இயற்கை விவசாயம், பண்ணை எந்திர நிர்வாகம் ஆகிய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்க வேண்டும்.

வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து அதிக வருமானம் பெற்றால் தான் விவசாயிகள் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். விவசாயிகள் வெறும் பயிரிடுவோராக மட்டும் இல்லாமல் வியாபாரியாகவும், முதலீட்டாளராகவும் மாறினால் தான் விவசாயம் செழிக்கும்.

நன்செய் பயிர்களுக்கு இதுவரை செய்த செலவில் பாதியளவாவது புன்செய் பயிர்களுக்கு செலவு செய்திருந்தால் இன்று உணவு பற்றாக்குறையும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. வரும் ஆண்டுகளில் போதுமான அளவு நிதி ஒதுக்கி புன்செய் நிலங்களை மேம்படுத்தி, கம்பு, சோளம், தினை, கேழ்வரகு, சாமை உள்ளிட்ட பயிர்களுக்கும், துவரை, உளுந்து, கொள்ளு, பாசிப்பயிறு போன்ற பருப்பு வகைகளும், கடலை, எள், குசும்பா, ஆமணக்கு போன்ற எண்ணை வித்து பயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றின் உற்பத்தியை பெருக்குவதற்கும், பொது வழங்கல் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கும் வழி வகை செய்ய வேண்டும்.

மாவட்டம் தோறும் முக்கிய இடங்களில் இயற்கை வழியில் பயிரிடப்பட்ட விளை பொருள்களுக்கென்று தனியாக ஒரு சந்தை ஏற்படுத்த வேண்டும். வேளாண் எந்திரங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும், வேளாண் சார்ந்த தொழில்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும்.

அரசின் தவறான கொள்கையினால் சர்க்கரை உற்பத்தி குறைந்து விட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பு குறைந்த விலையில் நம் நாட்டு சர்க்கரையை ஏற்றுமதி செய்து விட்டு இன்று அதிக விலையில் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இந்த தவறான கொள்கையை மாற்றிக்கொண்டு கரும்புக்கு நியாயமான விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.

தாவர எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கப்படும் எரிசாராயத்தை 5 சதவீதம் அளவில் பெட்ரோலோடு கலந்து பயன்படுத்தி பெட்ரோல் தேவையை குறைப்பதோடு, சுற்றுப்பு சூழ்நிலையை மேம்படுத்த முடியும்.

பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். விவசாயிகள் நலவாரியம் அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மரபணு மாற்ற உணவுகளையும், பயிர்களையும் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது. நாட்டின் பாரம்பரிய வேளாண் முறைகளையும், விதைகளையும் பாதுகாக்கவும் அதனை மேம்படுத்த வேண்டிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment