இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உடுமலைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு: விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி: விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலையில் காய்கறி வரத்து அதிகரிப்பால், அனைத்து காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடுமலை பகுதியில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி, அவரை, வெண்டை, முள்ளங்கி, பீட்ரூட், மிளகாய், புடலை, பாவற்காய், முருங்கை, கத்தரி, காலிப்ளவர் போன்ற பல்வேறு காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.


உடுமலை தினசரி சந்தை மற்றும் தனியார் ஏற்றுமதி மையங்களுக்கு கிராம பகுதிகளிலிருந்து தினமும் 400 முதல் 500 டன் காய்கறிகள் வரத்துள்ளது. இங்கிருந்து, தினமும் லாரிகள் மூலம், கேரளா மாநிலம் மற்றும் திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளி மாநில மற்றும் உள்ளூர் வரத்து அதிகரிப்பு மற்றும் விற்பனை குறைவு ஆகிய காரணங்களினால் காய்கறிகளின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிந்துள்ளது. தினமும் 600 டன் காய்கறிகள் வரை வரத்துள்ள நிலையில், தக்காளி மற்றும் வெங்காயம் வரத்து மேலும் அதிகளவு உள்ளது. வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளதால் நான்கு நாட்களாக காய்கறிகளின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.



கடந்த மாதம் ஒரு கிலோ பெல்லாரி 30 ரூபாய்க்கும், சின்னவெங்காயம் 28க்கும், தக்காளி 20க்கும், கேரட் 24; உருளைக்கிழங்கு 26; பீட்ரூட் 12; பீன்ஸ் 20; காலிபிளவர் 12; பச்சை மிளகாய் 16; கத்தரிக்காய் 20; முருங்கை க்காய் 50; பாகற்காய் 12; அவரைக்காய் 16; வெண்டைக்காய் 16 ரூபாய்க்கு விற்பனையானது. காய்கறிகளின் வரத்து அதிகரித்து வந்த நிலையில், காய்கறிகளின் விலையும் சரிந்து; பாதியாக குறைந்துள்ளது. நேற்று, பெல்லாரி 18; சின்னவெங்காயம் 14; தக்காளி 8; கேரட் 20; உருளைக்கிழங்கு 16; பீட்ரூட் 10; பீன்ஸ் - 15; காலிபிளவர் 8; பச்சை மிளகாய் 14; கத்தரிக்காய் 20; முருங்கைக்காய் 30; பாகற்காய் 10; அவரைக்காய் 8; வெண்டைக்காய் 12ரூபாய்க்கு விற்றது. விவசாயிகள் அதிர்ச்சி: மார்க்கெட்டுகளில் நிலவும் விற்பனை விலையில், 60 சதவீதம் வரை வியாபாரிகள் லாபம் மற்றும் போக்குவரத்து செலவு, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி ஆகிய காரணங்களினால் கூடுதலாக சேர்கிறது.



நேற்று தக்காளி விலை மார்க்கெட்டில் 8 ரூபாயாக நிலவிய நிலையில், விவசாயிகளிடமிருந்து கிலோ மூன்று ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. வெங்காயம் 14க்கு விற்றநிலையில், விவசாயிகளுக்கு கிலோவுக்கு ஆறு ரூபாய் மட்டுமே கிடைத்தது. இதே போல், அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்ததால், காய்கறி சாகுபடி விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். விதை, உரம் போன்ற இடு பொருட்கள் விலை உயர்வால், சாகுபடி செலவு அதிகரித்துள்ளதோடு, விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அதிகரித்துள்ள பறிப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காய்கறி விவசாயிகள், சாகுபடிக்கு முதலீடு செய்த தொகையை கூட திரும்ப எடுக்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வேதனையடைந்துள்ளனர். விலை சரிவால், பல நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறி பயிர்கள் பறிக்காமல், உரமாக மாற்றப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment