இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நிலத்தின் நலம் காக்க...: உரத்த சிந்தனை


"பூச்சிக் கொல்லிகளையும், மரபணு மாற்று விதைகளையும் பயன்படுத்தியதால், விளைநிலங்கள் பாழ்... இதைத் தவிர்க்க, உயிர்தன்மையை காக்கும் இயற்கை விவசாயம் அவசியம்...' - இந்த குரல்கள், நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. பூமியில் ஒவ்வொரு இரவும், ஏறத்தாழ பல லட்சம் பேர், உணவின்றி, பசித்த வயிறுடன் உறங்குகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு உற்பத்தி பெருகவில்லை. விவசாயத்தில் நவீன தன்மையை பயன்படுத்தாததே இதற்கு காரணம்.


"விவசாயத்தில் நவீன தன்மையை, பூச்சிக் கொல்லிகளை, உரங்களை, இயந்திரங்களை, மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தாவிட்டால், உணவுப் பஞ்சம் வந்து விடும். மற்ற துறைகள் நவீனத்திற்குள் நுழைந்து விட்ட நிலையில், விவசாயமும், இந்த, "நவீன ஆடை'யை அணிந்தால் தான் உயிர் பெறும்; மக்கள் உயிர் வாழ வழி தரும் என்ற கருத்து, சாதாரண மனிதனையும் யோசிக்க வைக்கக்கூடியது. நவீனத்திற்கு மாறினால், உற்பத்தி பெருகும் என்ற, "லாஜிக்' தான் இதற்கு காரணம். ஆனால், மற்ற தொழில் துறையும், விவசாயமும் ஒன்றா என்ற ஒப்பீடு எழுமானால், அது இந்த, "லாஜிக்'கை தகர்க்கக்கூடியதாக இருக்கும். உணவுப் பஞ்சம் வந்து விடும் என்பது கட்டுக்கதை என ஆதாரங்களை முன்வைத்து சண்டையிடுகிறது பிரான்சை சேர்ந்த, "பிரான்சஸ் மோரோ லேப்பி' என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழு.


அந்தக் குழுவின் அறிக்கை இப்படி சொல்கிறது...


* உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவைக் கும் உரிய தானியங்கள், காய்கறிகள் விளைகின்றன. தற்போதைய மொத்த விளைச்சலை, அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிரித்தால், ஒவ்வொருவருக்கும், தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், அரை கிலோ காய்கறி மற்றும் பழங்கள், கால் கிலோ பால், மாமிசம், முட்டை கிடைக்கும்.


* இவற்றின் மூலம், ஒவ்வொருவரும் 3,500 கலோரியை பெற முடியும். ஆனால், நன்கு வளர்ந்திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரியில் இருந்து 2,500 கலோரி தான். தினசரி 3,500 கலோரி உணவை உட்கொண்டால், ஒவ்வொருவரும் உடல் பருமன் நோயில் சிக்கிக் கொள்ள வேண்டி வரும். எங்கே பிழை இருக்கிறது என யோசிக்க வைக்கிறது இந்த குழுவின் அறிக்கை. உலக மக்களிடையே பகிர்தலில் உள்ள முரண்பாடு தான், பஞ்சத்திற்கும், பட்டினிக்கும் காரணமாக அமைகிறது. அமெரிக்க சிறுவனுக்கும், எத்தியோப்பிய சிறுவனுக்கும் பாரபட்சமின்றி சமமாய் விளைவித்து தருகிறாள் பூமித்தாய். ஆனால், ஒரு புறம் வீசி எறியப்படும், "பீட்சா'க்களும், மறுபுறம் ரொட்டித் துண்டுகளுக்கு ஏங்கும் நிலையும் தொடர நாம் தான் காரணம் என்பது உறுதிப்படுகிறது. உணவுப் பஞ்சத்தை தவிர்க்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது அடுத்த வாதமாக உள்ளது. முதல் வாதமே தோற்றுப் போன நிலையில், அடுத்த வாதமும் இப்படி நொறுங்கிப் போகிறது.


"புழு மற்றும் பூச்சிகளில் இருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காகவே, மரபணு மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. விளைச்சலை அதிகப்படுத்தும் தந்திரம் எதையும் செய்யவில்லையென, மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அப்படியிருக்க, உலக பசியைப் போக்க மரபணு மாற்று விதைகள் எப்படி உதவப் போகிறது?' என்ற இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கம் எதிரொலிக்கிறது. இந்த மரபணு மாற்று விதைகளை நம்பாமல், இயற்கை விவசாயத்தில் சாதனைக் கொடி நாட்டியவர்களின் பட்டியலும் பிரமிக்க வைக்கிறது.


* பொலிவியா நாட்டில், ஒரு எக்டேருக்கு 4 டன்னாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி, இயற்கை விவசாயத்தால் 15 டன்னாக உயர்ந்தது.


* கியூபாவில் காய்கறி விளைச்சல் இரு மடங்கானது.


* எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, 6 டன்னில் இருந்து 30 டன்னானது.


* கென்யா மக்காச்சோள விளைச்சல், 2.25 டன்னிலிருந்து 9 டன்னாக உயர்ந்தது.


* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல், 7.5 டன்னிலிருந்து 22 டன்னாக உயர்ந்தது.


* ஆந்திராவில் நாகரத்தின நாயுடு என்பவர், ஒற்றை நாத்து இயற்கை விவசாயம் மூலம், ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்து, சாதனை படைத்துள்ளார்.


இவையனைத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உழவு மற்றும் உணவு அமைப்பின் ஆய்வு தகவல். சாதாரண பொதுமக்களுக்கு, இந்த விவாதங்களின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததில்லை. ஆனால், அவர்களையும் இந்த விவகாரம் சென்றடைய காரணமாய் அமைந்து விட்டது பி.டி., கத்தரிக்காய். பார்லிமென்டில் துவங்கி, தமிழக சட்டசபை வரை இந்த விவகாரம் பேசப்பட்டு, "கத்தரிக்காய் முற்றினால், கடைக்கு வந்து தானே ஆகணும்' என்பது போல, தெருவோர டீக்கடை வரை இந்த விவகாரம் அலசப்படும் பொருளாகிவிட்டது. பி.டி., கத்தரிக்காய் குறித்து கருத்து கேட்பதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு விவசாயிகளிடம் கிடைத்த, "வரவேற்பு' ஆள்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால், கொஞ்ச நாளைக்கு இந்த விவகாரத்தை ஒத்திப் போடுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.


"பி.டி., கத்தரிக்காயை முழுமையாக தடை செய்யவில்லை; தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவில், இறுதி முடிவெடுப்போம்' என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கத்தரிக்காய் விவகாரம் இத்தோடு முடிந்து விடப் போவதில்லை எனத் தெரிகிறது. மத்திய அமைச்சரின் வார்த்தைகளையே தமிழக அரசும் ஒப்பிக்கிறது. "பி.டி., கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுக்கவில்லை' என்று, தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒருபுறம் சொன்னாலும், "பி.டி., கத்தரிக்காயை விளைவித்து, சோதனை நடத்தியதில், எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை' என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சான்றளித்துள்ளதையும், சட்டசபையில் அமைச்சர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதை விட ஒருபடி மேலாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமே, தனியாக மரபணு மாற்று விதைகளை தயாரித்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்தால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைவர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பல கோடி ரூபாய் அரசின் பணத்தை கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் பலன், விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை. ஒவ்வொரு ஆய்வறிக்கையும், சில லட்சங்களை விழுங்கி விட்டு, ஆவணங்களாகி, அதன் மூலம் குறிப்பிட்ட பேராசிரியரின் பெயருக்கு பின்னால் சில எழுத்துக்களை சேர்க்க மட்டுமே உதவி வருகிறது. மேற்கத்திய நாட்டின் விவசாயிகளும், விஞ்ஞானிகளும் சொல்லும் விஷயங்களே பல்கலைக்கு பிரதானமாக உள்ளது. அவர்கள் மட்டுமே மேதாவிகள், அறிவாளிகள் என்ற உளுத்துப்போன சிந்தனை, பல்கலைக் கழகம் முழுவதும் பரவி இருக்கிறது. பாட்டன் காலம் முதல் நாங்கள் பயன்படுத்திய விவசாய முறைகளை அறிந்து கொள்வதிலோ, அவற்றின் நன்மைகளையோ பல்கலை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்களை பொறுத்தவரை, பல்கலையிடம் இருந்து விவசாயிகள் கற்றால் போதும் என்ற ஒரு வழி சிந்தனை தான். விவசாயிகளுக்கான பல்கலைக் கழகத்தின் முதல் எதிரியே, இயற்கை விவசாயிகள் தான் என்ற, "கோரஸ்' கருத்து, நான் சந்தித்த பல விவசாயிகளிடமும் எதிரொலித்தது.


நமது பூமி பரப்பில், 2 சதவீதம் மட்டுமே விளைநிலம். விளைச்சலை முடிவு செய்வது, நிலத்தின் உயிரோட்டமுள்ள மேல் மண் பகுதியே. இந்த மண்ணை மாசுபடுத்தி, மலடாக்கும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இயந்திரமயமான, ரசாயன விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவும், 6 கிலோ மண்ணின் உயிர்த்தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக்காவை பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ, 12 கிலோ மண்ணின் உயிர் தன்மையை அழித்து, ஒரு கிலோ உணவு பெறப்படுகிறது. முழுமையான நவீனத்துக்குள், இந்திய விவசாயம் செல்லும் முன்பே ஏகப்பட்ட குளறுபடிகள். கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு அரசு வாரி வழங்கினாலும், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.


அப்படி இருக்கையில், மரபணு மாற்று விதைகளை அடிப்படையாகக் கொண்ட, மேற்கத்திய விவசாய முறையில், இந்திய விவசாயம் அமையுமானால், அது ஏற்படுத்தும் விளைவுகளை கற்பனைக்குள் கொண்டு வர முடியவில்லை. விளைநிலத்தோடு விளையாடும் முன், உலகமும், அரசும், அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும், மேதாவிகளும் யோசிக்கட்டும். expressboy007@yahoo.com


- எஸ்.கோவிந்தராஜ், பத்திரிகையாளர்

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment