இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நாகை விவசாயிகளுக்கு ரூ.468.48 கோடி கடன்



கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் மற்றும் வேளாண் நகைக்கடனாக 468.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் (பொ) அண்ணாதுரை தெரிவித்தார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் (பொ) அண்ணாதுரை தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்:



அலெக்சாண்டர்: பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரப்படும் ஆறுகள், வாய்க்கால்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.



கோதண்டராமன்: கொள்ளிடம் அருகே பழையபாளையம் மற்றும் புதுமண்ணியாறு ராஜன் வாய்க்கால் கடைமடை பகுதி விவசாயிகள் சாகுபடி செய்த சம்பா பயிர் தொடர் மழையால் சேதமடைந்துள்ளது. மேலும் விவசாயிகள் நலன் கருதி மார்ச் மாதம் முடிய கீழணையில் தண்ணீர் தேக்கி வைத்து வழங்க வேண்டும்.சோமு இளங்கோ: வெண்ணாறு பாசன பகுதியான தலைஞாயிறு ராஜன்வாய்க்காலில் உடன் தண்ணீர் திறந்துவிட வேண்டும். பின்னர் கலெக்டர் (பொ) அண்ணாதுரை பேசியதாவது: நாகை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 601 எக்டேரில் சம்பா, தாளடி அறுவடை முடிந்துள்ளது. எக்டேருக்கு அதிகபட்சமாக 9 ஆயிரத்து 640 கிலோவும் குறைந்தபட்சமாக ஆயிரத்து 608 கிலோவும் சராசரியாக 4 ஆயிரத்து 869 கிலோவும் நெல் கிடைக்கப் பெற்றுள்ளது. நடப்பாண்டில் 34 எக்டேரில் மக்காச்சோளம் , 2 ஆயிரத்து 245 எக்டேரில் நிலக்கடலை, 43 ஆயிரத்து 511 எக்டேரில் உளுந்து, 23 ஆயிரத்து 453 எக்டேரில் பச்சை பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது தவிர 305 எக்டேரில் பருத்தி, 5 ஆயிரத்து 143 எக்டேரில் கரும்பு, 273 எக்டேரில் காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் உர விற்பனை நிலையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு உள்ளது. கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் மூலமாக பயிர் கடனாகவும் வேளாண் நகை கடனாகவும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 572 விவசாயிகளுக்கு இதுவரை 468.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் பெற்ற விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பிரீமியம் தொகையாக 70.3 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.

கடன் பெறாத விவசாயிகள் பிரீமியம் தொகையாக 2.31கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் வாயிலாக நடப்பாண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 1.66 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கொள்முதல் குழு திட்டத்தின் மூலம் ஆயிரத்து 263 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வன உயிரின காப்பாளர் திருநாவுக்கரசு, வேளாண் இணை இயக்குனர் கருணாகரன், கூட்டுறவு துணை பதிவாளர் குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment