கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை
10:28 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பயிர் சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் உரக் கடைகளில் இருப்பில் இருந்த உரங்களை ஏற்கெனவே அரசு நிர்ணயம் செய்த விலைக்கே விற்க வேண்டும். ஏப். 1-ம் தேதி முதல் சத்துக்களின் அடிப்படையில் மானியம் வழங்கும் திட்டத்தில் தொடர்ந்து யூரியாவுக்கு மட்டும் மத்திய அரசு அதிகப்பட்ச சில்லரை விற்பனை விலையை நிர்ணயம் செய்யும். யூரியா அல்லாத இதர உரங்களுக்கு அந்தந்த உர நிறுவனங்களே சில்லரை விலையை நிர்ணயம் செய்வர். இதனால் அந்த உரங்கள் சில்லரை விற்பனை விலையில் நிறுவனங்களிடையே வித்தியாசம் இருக்கும். சில்லரை விற்பனை விலை உர மூட்டைகளில் தவறாது குறிப்பிடப்பட்டு இருக்கும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள சில்லரை விற்பனை விலைக்கு மேல் கட்டாயமாக விற்பனை செய்யக் கூடாது. மூடைகளில் உள்ள சில்லரை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்தால், உரக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் அனைத்து உர விற்பனையாளர்களும் மார்ச் 31-ம் தேதி இருப்பில் இருந்த உரங்களை ஏற்கெனவே அரசு நிர்ணயித்த விலைக்கே விற்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று வேளாண் துறை இணை இயக்குநர் பாண்டியராசு தெரிவித்துள்ளார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது