இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கள்ளிப்பூச்சிகளுக்கு தெளித்த மருந்து? அழிந்தன, தர்பூசணிக்கொடிகள்



கள்ளிப்பூச்சியை அழிப்பதாக கூறி வேளாண் துறையினர் தெளித்த மருந்தால், இரண்டரை ஏக்கரில் இருந்த தர்பூசணி மற்றும் அரசாணி கொடிகள் முற்றிலும் கருகி விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர், விவசாயிகள். அன்னூர் வட்டாரத்தில் 7,000 ஏக்கர் பயிர் கள்ளிப்பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விளைச்சல் கடுமையாக குறைந்து விட்டது. கள்ளிப்பூச்சியை அழிக்க, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை இணைந்து, முதல் கட்டமாக அன்னூர் வட்டாரத்தில் "அசாடிராக்டின்' (வேம்பு மருந்து) தண்ணீரில் கலந்து பவர் ஸ்பிரேயர் மூலம் தெளித்து வருகின்றன. காரே கவுண்டன்பாளையம் ஊராட்சியில் கடந்த இருவாரங்களுக்கு முன் வேம்பு மருந்து தெளிக்கும் பணி துவங்கியது.



கெம்பநாயக்கன்பாளயம், கதவுகரை ஆகிய ஊர்களில் பல நூறு ஏக்கர்களில் கள்ளிப்பூச்சியை அழிக்க மருந்து தெளிக்கப்பட்டது. இந்த மருந்து தெளிப்பால் தர்பூசணி மற்றும் அரசாணிக்காய் பயிர்கள் கருகி நாசமாகி விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கீழ்கதவுகரை, பால்கார தோட்ட விவசாயி மணியன் (40) கூறியதாவது: ஒன்றரை ஏக்கரில் தர்பூசணி மற்றும் ஒரு ஏக்கரில் அரசாணிக்காய் மற்றும் சுரைக்காய் பயிரிட்டுள்ளேன். அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் கடந்த சீசனில் ஒருவர் தர்பூசணி பயிரிட்டார்; நல்ல லாபம் கிடைத்தது. இதையடுத்து, நானும் தர்பூசணி வீரிய விதைகள் ஆறு பாக்கெட் வாங்கி விதைத்தேன். உரம், பூச்சி மருந்து அளித்தல், களை எடுத்தல் ஆகியவற்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன், பழங்கள் பருத்து இன்னும் சில நாட்களில் பறிக்கும் நிலையில் உள்ளன.



இந்நிலையில் கடந்த 2ம் தேதி வேளாண்துறையில் இருந்து மூன்று பேர் வந்து எங்களை கேட்காமல் எங்கள் தோட்டத்தில் இருந்த தர்பூசணி மற்றும் அரசாணிக்காய் தோட்டத்தில் "அசாடிராக்டின்' மருந்தை "பவர் ஸ்பிரேயர்' மூலம் அடித்துச் சென்றனர். மருந்து தெளித்த மூன்று நாட்களில் தர்பூசணி மற்றும் அரசாணிக்காய் கொடிகள் கருகத் துவங்கின. என்ன செய்தும் கொடிகள் கருகுவதை தடுக்க முடியவில்லை. தர்பூசணி மிகவும் மென்மையான பயிர், மருந்து மற்றும் உரம் கொடுக்கும்போதே மிகவும் பாதுகாப்பான முறையில் தர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வேளாண்துறையினரே இப்படி செடிகளை கருக வைத்து விட்டனர்.



கொடிகள் கருகி விட்டதால் அத்துடன் தர்பூசணி வளர்ச்சி நின்று விட்டது. கேரள வியாபாரிகள் தோட்டத்தில் உள்ள பழங்களை பார்த்து விட்டு வாங்க மறுத்து விட்டனர். இதனால், மூன்று மாதங்கள் பாடுபட்டு, செலவு செய்து பயனில்லாமல் போய் விட்டது; ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அன்னூர் வேளாண் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். அசாடிராக்டின் மருந்தால் கொடி கருகாது. பாதிக்கப்பட்ட கொடி, செடியை சிறிது எடுத்து வாருங்கள்; பரிசோதித்து பார்க்கிறோம் என்றனர். மாதிரியை கொடுத்தும் இதுவரை எந்த பதிலுமில்லை. அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு விவசாயி தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment