இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகளிடம் வரவேற்பு:​ ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ.​ பிரகாஷ் வியாழக்கிழமை தெரிவித்தார்.​ அடுத்த ஆண்டு மாவட்டத்தில் முழு பரப்பளவிலும் செம்மை நெல் சாகுபடி முறைக்கு மாற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.​ தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம்,​​ திருச்செந்தூர்,​​ ஆழ்வார்திருநகரி மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் வேளாண்மை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆத்மா திட்டம்,​​ தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்,​​ ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டம்,​​ நெல் விதைப்பண்ணைகள்,​​ வேளாண் மருந்தகம் மற்றும் சிறு மண் ஆய்வுக்கூடம்,​​ டான்வாப் பண்ணை மகளிர் குழுக்களுக்கான மானியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.​ பிரகாஷ் கள ஆய்வு மேற்கொண்டார்.​ ​ ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பழையகாயல்,​​ முக்காணி,​​ பேரூர்,​​ திருச்செந்தூர் ஒன்றியம் ஆறுமுகநேரி,​​ ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அங்கமங்கலம்,​​ குறுக்காட்டூர்,​​ தூத்துக்குடி ஒன்றியம் கூட்டுடன்காடு ஆகிய கிராம பகுதிகளில் வயல் வெளிகளில் அவர் ஆய்வு நடத்தினார்.​ அப்போது செம்மை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து,​​ இந்த திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தார்.​ பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:​ தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறியீடு 19 ஆயிரம் ஹெக்டேர் ஆகும்.​ இதுவரை 19,081 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.​ மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி 8200 ஹெக்டேர் குறியீடு ஆகும்.​ ஆனால்,​​ மாவட்டத்தில் 8230 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.​ அடுத்த ஆண்டு மொத்த நெல் சாகுபடி பரப்பும் செம்மை நெல் சாகுபடி முறைக்கு மாற நடவடிக்கை எடுக்கப்படும்.​ மாவட்டத்தில் ஆத்மா,​​ தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்,​​ ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டம் போன்ற மத்திய அரசின் பல்வேறு மானியத் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.​ மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேளாண் மருந்தகம் மற்றும் சிறு மண் ஆய்வுக்கூடம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு,​​ இதுவரை 5 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.​ இந்த ஆய்வின் போது வேளாண்மைத் துறை இணை இயக்குநர் லுயிஸ் ராஜரத்தினம்,​​ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ​(வேளாண்மை)​ தனசிங் டேவிட்,​​ வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசுந்தர்,​​ ஆத்மா திட்ட முதன்மை அதிகாரி ஜோசப் நசரேன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment