இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நிலக்கடலை விற்க நல்ல நேரம்! விவசாயிகளுக்கு பல்கலை அறிவுரை

"நடப்பு மாதம் முதல் வரும் ஏப்ரல் வரை நிலக்கடலை விலை குவிண்டாலுக்கு 2,900 முதல் 3,100 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால், இருப்பு வைத்துள்ள நிலக்கடலையை உடனே விற்று விவசாயிகள் லாபம் பெறலாம்' என, கோவை வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.


வேளாண் பல்கலை அறிக்கை: இந்தியாவின் முக்கிய எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையின் விலை, கடந்த ஓராண்டாக தேக்கநிலையை சந்தித்து வந்துள்ளது. குவிண்டாலுக்கு 2,300 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக விலை இருந்தது. கடந்த 2008-09 ல் 42.2 லட்சம் "டன்'னாக இருந்த நிலக்கடலை உற்பத்தி, 2009-10ல் 32.9 லட்சம் டன்னாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. குஜராத்தில் அதிக நிலக்கடலை உற்பத்தியாகிறது. கடந்த 2008-09ல் 18 லட்சம் ஹெக்டரில் பயிரிடப்பட்டது. இது, 2009-10ல் 16.35 லட்சம் ஹெக்டராக குறைந்து விட்டது. பருவம் தவறிய மழை, விவசாயிகள் பருத்திக்கு மாறியது ஆகியவை உற்பத்தி சரிவுக்கு காரணங்கள். இந்திய அளவிலும் 53 லட்சம் ஹெக்டராக இருந்த இதன் சாகுபடி பரப்பு, 2009-10ல் 44 லட்சம் ஹெக்டராக குறைந்து விட்டது.



தமிழகத்தில் சுமார் ஐந்து லட்சம் ஹெக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இது தேசிய அளவில் 16 சதவீதம். இந்த ஆண்டு மழை பற்றாக்குறை, விவசாய வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு மாறியது ஆகியவற்றால் நிலக்கடலை சாகுபடி குறைந்து விட்டது. குறைந்து விட்ட உற்பத்தி, அதிகரித்துள்ள தேவை, மாற்று உணவு எண்ணெய்களின் இறக்குமதி போன்ற காரணங்களால், நல்ல விலை கிடைக்கும் வரை இருப்பில் உள்ள நிலக்கடலையை விற்காமல் வைத்திருக்கலாமா, என விவசாயிகள் குழம்புகின்றனர்.



கோவை வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. நிலக்கடலையின் முக்கிய சந்தையான சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கடந்த 15 ஆண்டுகளின் விலை தகவல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தகவலின்படி, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, குறைந்துள்ள நிலக்கடலை சாகுபடி பரப்பு, விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலகளவில் பனை எண்ணெய் உற்பத்தி குறைய வாய்ப்புகள் இருந்தாலும், அதை சோயாவின் அதிக உற்பத்தி ஈடுகட்டும்.



பனை எண்ணெய் கையிருப்பு, பருத்தி மற்றும் நெல் உமி எண்ணெய்களின் உபயோகம் ஆகியவை, நிலக்கடலை விலையை ஏற விடாது. ஆகவே, உடைக்காத நிலக்கடலையின் பண்ணை விலை, பிப்., முதல் ஏப்., வரை குவிண்டாலுக்கு 2,900 ரூபாய் முதல் 3,100 ரூபாய் வரை கிடைக்கும். மே, ஜூன் மாதங்களில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குவிண்டாலுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலக்கடலை பருப்பிலும் இதே போக்குதான் காணப்படும். மத்திய அரசு, பனை எண்ணெய்க்கு இறக்குமதி வரி விதித்தால், விலை சற்று உயர வாய்ப்புள்ளது; பனை எண்ணெய் இறக்குமதி செய்தால் விலை சரிய வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலக்கடலையை உடனே விற்று லாபம் அடையலாம். இவ்வாறு, வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment