இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மதுரை-நீர்வளத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தகவல் மையம் : விளாச்சேரியில் அமைகிறது

உரம் விலை அதிகரிப்புக்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு உள்ளது. சமீபகாலமாக உரம் விலை அதிகரிக்கப் போவதாகவும், மத்திய அரசு இதற்கான முடிவுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. முதல்அமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உரவிலையை அதிகரிக்கக் கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். யூரியா உரவிலை 10 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது. கடந்த பலஆண்டுகளாக உரம்விலை அதிகரிக்கவில்லை. இனி உர நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என, அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் பரவியுள்ளன. உரத்தின் விலை அதிகரித்தாலும், விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காது. இடைத் தரகர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே உர விலையை உயர்த்தக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நம்நாட்டின் உரத் தேவைக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்துஇருக்கும் நிலை உள்ளது. நம்நாட்டிலேயே உர
நிறுவனங்கள் இருந்தாலும், மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்துதான் பெற வேண்டியுள்ளது. இதற்கான விலை அதிகம். அதனால் நேரடியாக உரமாகவே இறக்குமதி செய்து, அரசு மானியத்துடன் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில், டாலரின் விலை ஏற்றம், வீழ்ச்சிக்கு ஏற்ப, தங்கம், ஷேர் மார்க்கெட் போல, உரத்தின் விலையும் தினமும் ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, உரவிலை உயர்வால் விவசாயிகளே பாதிப்பர். அவர்களின் விளைபொருளுக்கு கட்டுப்படியாகும் விலையை கிடைக்கச் செய்தால் உரவிலை உயர்வு பிரச்னையில்லை. இதற்கு நெல், கரும்பை போல, விவசாயிகளின் அனைத்து பொருட்களையும் அரசே கொள்முதல் மையம் அமைத்து பெற வேண்டும் . உரவிலையை உயர்த்தும் முன், விவசாயிகளின் கருத்தறிந்து நிர்ணயிக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஏற்கனவே வறட்சியால் பாதிப்பு உள்பட பல பாதிப்பில் இருக்கும் விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுவர் என்கின்றனர். மதுரை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எம்.பாண்டியன்: கடந்த 1990 ல் யூரியா மூடை ஒன்றுக்கு 121.50 ரூபாயாக இருந்தது. இன்று 251.11 ரூபாயாக உள்ளது. இதுபோல அனைத்து உரமும் உயர்ந்துள்ளது. 1994ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உரமானியம் தொடரும்.
நீண்டகால உரக்கொள்கையை உருவாக்குவோம் என்றார். ஆனால் விலை அதிகரித்துள்ளது. தீவிர உணவு உற்பத்தி செய்தும் பலனில்லை. இதனால் வரும்காலங்களில் ரசாயன உரத்தை பயன்படுத்தாமல், ராகி, சோளம் என பயிரிட வேண்டியதுதான். உரஆலை முதலாளிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்நிலுவை உள்ளது. அவர்கள் கடன்பெற வங்கிக் கதவு திறந்திருக்கிறது. ஆனால் வறட்சி, புயல், மழை, வெள்ளம் என இயற்கை இடர்பாடுகளை தாங்கி, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை இந்த உரவிலை அதிகரிப்பு பாதிக்கும். இதனால் உணவு உற்பத்தியும் பாதிக்கும் என்றார்.மதுரை தெற்கு தாலுகா விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.பாண்டியன்:மத்திய அரசின் முடிவு கண்டிக்கத் தக்கது. உரத்தின் விலையை கூட்டினால், விளைபொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் உரமானியத்தை விவசாயிகளுக்கே நேரடியாக
தரவேண்டும். ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என நிர்ணயித்து, மானிய தொகையை கூட்டுறவு சங்கம் மூலம் தரலாம். விவசாயத்தில் ஏற்கனவே தொழிலாளர் பிரச்னை உள்ளது. உரவிலை உயர்வு விவசாயிகளை பாதிக்கும். எனவே இது விவசாய விரோத கொள்கை என்றே கூற வேண்டும் என்றார்.

மதுரை மாவட்ட உர விற்பனையாளர் சங்க செயற்குழு உறுப்பினர் எஸ். நாகசங்கர்: பாக்டம்பாஸ், காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., என அனைத்து உரங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்தில் யூரியா கலந்துள்ளது. இதனால் (50 கி) மூடைக்கு 30 ரூபாய் வரை விலை கூடினால், டன்னுக்கு மற்ற கூலியெல்லாம் சேர்த்து 500 ரூபாய் வரை அதிகரிக்கும். இது விவசாயத்தை கடுமையாக பாதிக்கும். பெட்ரோல், டீசல் போல ஒவ்வொரு ஆண்டும் 4, 5 ரூபாய் என அதிகரித்து இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் 15 ஆண்டுகளாக இல்லாமல், தற்போது உயர்த்தினால் அதிக பாதிப்பு இருக்கும். தற்போது உரவிலை டன்னுக்கு 4760ம், அவற்றை விற்பனை செய்ய கொண்டு வரும் போக்குவரத்து, ஏற்று, இறக்கு கூலி என சேர்ந்து 5 ஆயிரம் ரூபாயையும் தாண்டி விடுகிறது. இந்த போக்குவரத்து செலவை அரசு நிர்ணயிக்கும் விலையிலேயே சேர்த்தால், எம்.ஆர்.பி., ரேட்டில் விற்க முடியும். இல்லையெனில் கூடுதல் விலைக்கு விற்பதை தவிர்ப்பது சிரமம் என்றார். ஏற்கனவே உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற நிலை உள்ளது. தற்போது உரவிலையும் உயர்ந்தால், உழவர்களின் பாடு திண்டாட்டம் தான்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment