இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பிசுபிசுத்து போன மரவள்ளி முத்தரப்பு கூட்டம் : இடைத்தரகர்களை அடியோடு ஒழிக்க விவசாயிகள், அதிபர்களுக்கு அறிவுரை


சேலம்: ""இடைத்தரகர்களை ஒழிக்க ஆலை அதிபர்களே நேரடியாக விவசாயிகளின் இடத்துக்கு சென்று ஆட்களை கொண்டு அறுவடை செய்து உரிய விலையை வழங்க வேண்டும். விவசாயிகள் விரும்பும்பட்சத்தில் லேம்ப் கூட்டுறவு சங்கம் மூலம் ஆலைகளுக்கு விற்பனை செய்யலாம்,'' என, சேலத்தில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் சந்திரகுமார் அறிவுறுத்தினார். கேரளாவை அடுத்து தமிழகத்தில் தான் மரவள்ளி கிழங்கு பயிரிடுவது அதிகம் உள்ளது. சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விவசாயிகள் மரவள்ளியை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர். மரவள்ளி மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் போன்றவற்றுக்கு வடமாநிலங்களில் கிராக்கி அதிகம். அங்கு உணவுப் பொருளாக பயன்படுவதால் அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் புரோக்கர் கூட்டம் அதிகம் உள்ளது.



மரவள்ளிக்கு உரிய விலை நிர்ணயம் வேண்டும். அரசு மூலம் ஸ்டார்ச் அளவு கணக்கிடும் கருவி அமைக்கப்பட வேண்டும். சேகோ சர்வில் விவசாயிகளையும் உறுப்பினர்களாக்க வேண்டும். ஜவ்வரிசி, ஸ்டார்ச் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகளே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 2002ல் நடந்த முத்தரப்பு கூட்டத்துக்கு பின் கூட்டம் நடத்தப்படவில்லை. மரவள்ளி விவசாயிகளின் குறைகளை தீர்க்க முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் நேற்று சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் விவசாயிகள், அரசு அலுவலர்கள், சேகோ மற்றும் ஸ்டார்ச் உரிமையாளர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நடந்தது.



இடைத்தரகர் ஸ்கேல் அளவுக்கும், ஆலை அதிபர் ஸ்கேல் அளவுக்கும் இடையே பாயிண்ட் அளவு மாறுகிறது. அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இடைத்தரகர்கள் அதிக கடனை வழங்கி விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆலை அதிபர்களே இடைத்தரகர்களை தூண்டி விடுகின்றனர் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். மற்ற உணவுப் பொருட்கள் போன்று ஜவ்வரிசியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஆலை கழிவு நீரை சுத்திகரித்து மின்சாரம் தயாரிக்க 50 சதவீத மானிய கடன் வழங்க வேண்டும். இடைத்தரகர்களை ஒழிக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என ஆலை அதிபர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.



கூட்டத்துக்க தலைமை வகித்து கலெக்டர் சந்திரகுமார் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 28 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிரிடப்பட்டு வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். ஆண்டுதோறும் 10.36 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிர் கடனாக இந்த ஆண்டு மட்டும் 35.35 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் லாபம் ஈட்ட இடைத்தரகர்கள் இடையூறாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆலை அதிபர்களே நேரடியாக கிழங்கு கொள்முதல் செய்வதாக கூறியுள்ளனர்.
ஆலை அதிபர்களுக்கும் மின்சாரம் தயாரிக்க மானிய கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முத்தரப்பு கூட்டம் இரு தரப்புக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தரகர்கள் இல்லாதபட்சத்தில் தான் உரிய விலை நிர்ணயம் செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.



அதிக எதிர்பார்ப்போடு வந்த விவசாயிகள் எந்த முடிவும் எடுக்கப்படாததால் விரக்தியுடன் திரும்பினர். உருப்படியாக ஏதும் நடக்கவில்லை மரவள்ளி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி கூறுகையில், ""முத்தரப்பு கூட்டத்தில் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. வாரியம் அமைப்பது ஒன்று தான் உள்ளது. இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், ஆலை உரிமையாளர்கள் தான் அவர்களை உருவாக்குகின்றனர். மரவள்ளி லோடு ஏற்றிச்செல்லும் லாரிகளில் மண்ணை அதிகமாக போட்டு, கிழங்குக்கான விலையை குறைத்து விடுகின்றனர். கூட்டுறவு சங்கங்களிலும் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை. விலையை பொறுத்தமட்டில் தற்போது நல்ல விலை உள்ளது,'' என்றார்.



சேகோ மற்றும் ஸ்டார்ச் உரிமையாளர் சங்க மாநில தலைவர் துரைசாமி கூறுகையில், ""மரவள்ளி முத்தரப்பு கூட்டம் கிழ்ச்சியளிக்கிறது. இடைத்தரகர்களை ஒழிக்க, விவசாயிகள் ஆலைகளுக்கு நேரடியாக கிழங்குகளை வழங்க வேண்டும். ஆலைகளின் கழிவு நீர் மூலம் மின்சாரம் தயாரிக்க 50 சதவீதம் மானிய கடனுதவி வழங்க கோரிக்கை விடுத்தோம். நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்,'' என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment