இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உலகச் சந்தையில் பனை பொருட்களுக்கு வாய்ப்பு: முதன்மை ஆய்வாளர் பெருமிதம்



வல்லநாடு : பனைபொருட்களுக்கு உலக சந்தையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் பொன்னுச்சாமி பேசினார்.
அந்தோணியார்புரம் கிராமத்தில் பனைத் தொழில் பயிற்சி முகாம் கிள்ளிகுளம் வேளா ண்மை கல்லூரியின் முதல்வர் ராஜராஜன் மேற்பார்வையில் நடந்தது. முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட பல்நோக்கு சேவா சங்கத்தின் இயக்குநர் விக்டர் லோபோ அடிகளார் தலைமை வகித்தார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியின் பேராசிரியர் நயினார் வரவேற்றார். முகாமில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பனை ஆராய்ச்சி திட்டங்களின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் பொன்னுச்சாமி பேசுகையில் மத்திய அரசின் உயர் தொழில்நுட்பத் துறையின் மூலம் 48.32 லட்சம் ரூபாய் மதிப்பில் விரைவில் அதிக பதனீர் தரும் குட்டை பனை வகைகளை கண்டறிதல் திசு வளர்ப்பு மற்றும் தண்டுப் பகுதிகளை கொண்டு நாற்று உருவாக்கும் தொழில் நுட்பங்களை கண்டறிதல் பனை தொழிலாளர்களுக்கு பனை பொருட்கள் தயாரிப்பில் பயிற்சி அளித்தல் ஆகிய ஆராய்ச்சி திட்டங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் மாநில மரமாக போற்றப்படும் பனை மரங்கள் மாநிலம் முழுவதும் 10 லட்சம் இருந்தன. தற்போது 30 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.



ஆகையால் பனைமரங்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்காக வெட்டப்படுவது தவிர்க்க வே ண்டும் எனவும் குறிப்பிட்டார். பனையில் பதநீரிலிருந்து பனைவெல்லம், கற்கண்டு, தேன், பொங்கல், பாயாசம், பனங்கிழங்கு மாவிலிருந்து லட்டு, கேசரி பக்கோடா, உப்புமா, பனங்கொட்டையின் பால் போன்ற சீம்பிலிருந்து பேடா, அல்வா, பனம் பழத்திலிருந்து செறிவூட்டப்பட்ட பழக்கூழ், தயார்நிலை பானம் ஆகியவையும், நுங்கிலிருந்து உலர்பழம், குளிர்பானம் ஆகிய மதிப்பு கூட்டபட்ட உணவுப் பொருட்கள் இயற்கை சார்ந்த பூச்சிக்கொல்லி நச்சுகளற்ற பாதுகாப்பான உணவுப் பொருட்களாகும். பனையின் ஓலை, மட்டை, தண்டு, வேர் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் கைவினை பொருட்களுக்கு உலகசந்தையில் பெரும் வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்.
முகாமில் தூத்துக்குடி மாவட்ட பனை பொருள் தொழிலாளர் சங்க தலைவர் ராயப்பன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜோசப் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். உதவி பேராசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment