'வார்டு' புயல் இலங்கையில் கரையை கடந்தது : தமிழகத்தில் மேலும் ஒரு நாள் மழை நீடிக்கும்
9:14 PM 'வார்டு' புயல் இலங்கையில் கரையை கடந்தது, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
சென்னை : தமிழகத்தை மிரட்டிய வார்டு புயல், இலங்கை திரிகோணமலை அருகே நேற்று கரையை கடந்தது. வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால், மேலும் ஒருநாள் மழை நீடிக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,"இலங்கை அருகே, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்து, நேற்று காலை 8 மணி அளவில் மன்னார் வளைகுடா, ஆந்திரா மற்றும் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்' என்றார். எங்கெங்கு மழை பெய்துள்ளது: திருப்பூண்டியில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை பெய்துள்ளது. பண்ருட்டி, மயிலாடுதுறை 15; மணல்மேடு, வல்லத்தில் 14; நீடாமங்கத்தில் 13; திருத்துறைப்பூண்டியில் 12; சென்னையில் 8 செ.மீ., என மழை பதிவாகியது.
விடிய விடிய கனமழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நள்ளிரவு முதல் விடிய, விடிய கன மழை பெய்தது. விட்டு, விட்டு பெய்த மழையால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாயினர். பலத்த மழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அயனாவரம், அண்ணாசாலை, திருமங்கலம் ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக பலத்த காற்றுடனும், கொந்தளிப்பாக காணப்பட்ட பாம்பன் கடல், நேற்று அதிகாலை மூன்று மணிக்கு மேல் அமைதியாக காணப்பட்டது. காற்றும் குறைந்தது. இதனால், பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. அதிகாலை, சென்னையில் இருந்து வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வந்தது. தொடர்ந்து சென்னை எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர் ரயில்கள் என, அனைத்து ரயில்களும் வழக்கம்போல் ராமேஸ்வரம் வந்து சென்றன. பாம்பன் துறைமுக அலுவலகத்தில், நான்கு நாட்களாக ஏற்றப்பட்டிருந்த மூன்றாம் எண் கூண்டும் நேற்று காலை 11 மணிக்கு இறக்கப்பட்டது.
![](http://img2.blogblog.com/img/icon18_edit_allbkg.gif)
குறிச்சொற்கள்: 'வார்டு' புயல் இலங்கையில் கரையை கடந்தது, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது