இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வெளி மாவட்டங்களுக்கு பழம், காய்கறி ஏற்றுமதி விவசாயிகளுடன் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் விளையும் வாழை, பப்பாளி, தக்காளி மற்றும் காய்கறிகளை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய, விவசாயிகள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பழ வகைகள், காய்கறிகள் அதிகம் விளைகின்றன. குறிப்பாக வாழை, பப்பாளி, தர்பூசணி, மா, நெல்லி, கத்திரி, மிளகாய், அவரை, வெண்டை, தக்காளி, காலிப்பிளவர், முட்டைகோஸ் உள்ளிட்டவைகளை விவசாயிகள் ஆண்டுதோறும் ஆர்வமாக சாகுபடி செய்து வருகின்றனர்.



கடந்த காலங்களில் இயற்கை சீற்றங்கள், அதிகபடியான விளைச்சல் ஆகியவற்றால் விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வந்தனர். அதை போக்கும் வகையில் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க கலெக்டர் அமுதா உத்தரவின் பேரில், மாவட்டத்தில் விவசாயிகள் விளை பொருள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.



அந்த குழு, விவசாயிகளின் விளைபொருட்களை லாபகரமான முறையில் விற்பனை செய்ய ஒவ்வொரு ஆண்டும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மேலாளர்களையும், விவசாயிகளையும் அழைத்து கலந்துரையாடி, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயித்து வருகிறது.அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விளை பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் தனியார் நிறுவனங்கள் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் வேளாண் வணிகத்துறை சார்பில் தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ராஜன் தலைமை வகித்தார். தர்மபுரி வருவாய் கோட்ட வேளாண் அலுவலர் தாம்சன் வரவேற்றார். வாழை, பப்பாளி, தர்பூசணி மற்றும் காய்கறி பயிர்களுக்கு அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை இணை பேராசிரியர் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், ஆத்மா விவசாயிகள் உற்பத்தி செய்த ஜீ 9 வாழை, ஏலக்கி, வாழை, தர்பூசணி, பப்பாளி, கிரின் லாங் கத்தரி, வரிக்கத்திரிக்காய், பீர்க்கு, புடல், காலிபிளவர், மிளகாய், அவரை, பட்டை அவரை, தக்காளி, நெல்லி மற்றும் வெல்லம் உள்ளிட்ட விளை பொருட்கள் அடங்கிய கண்காட்சி நடத்தப்பட்டது.கோவை, சென்னை, தலைவாசல், பெங்களூரு, குப்பம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து வந்த தனியார் கொள்முதல் நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டு கண்காட்சியில் விவசாயிகள் வைத்து இருந்த விளைபொருள்களின் தரம், விலை குறித்து விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடினர்.அதையடுத்து, விளைபொருட்கள் குறித்து திருப்தி அடைந்த தனியார் நிறுவன உரிமையாளர்கள், விவசாயிகளின் விளைபொருள்களை கொள்முதல் செய்ய விளைபொருள் குழு மூலம் புரிந்துணர்வு செய்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் துல்லிய பண்ணையத்தின் மூலம் விளையும் காய்கறிகள், பப்பாளி, தர்பூசணி மற்றும் வாழை தரமானதாகவும், நுகர்வோர் விரும்பும் வண்ணம் விற்பனைக்கு ஏற்றதாகவும், விளைபொருட்களின் தரம் ஏற்றுமதி உகந்ததாக உள்ளதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட தனியார் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர். துல்லிய பண்ணை விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணி, கோவிந்தராஜ், சண்முகம், சுந்தரம், ஜெயராஜ் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விளைபொருட்கள் விலை குறித்தும், அவற்றின் சாகுபடி முறை குறித்தும் பேசினர். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் துரைசாமி, வேளாண்மை துணை இயக்குனர் மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கணேசன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், இம்மானுவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment