உழவர் மன்றங்கள் துவக்க வலியுறுத்தல்
8:08 PM உழவர் மன்றங்கள் துவக்க வலியுறுத்தல், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் உழவர் மன்றங்களைத் துவக்கிப் பயனடையுமாறு நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் ஜி.சந்தானம் கேட்டுக் கொண்டார்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிóன் செயலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை வகித்து ஜி.சந்தானம் பேசியது:
ஒரே கிராமத்தைச் சேர்ந்த, விவசாயம் அல்லது அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மிகச்சாதாரண ஏழை, எளிய மக்களால் உருவாக்கப்படுவதே உழவர் மன்றம். இம்மன்றத்தினர் வங்கிக் கடன் மூலம் தங்களது வாழ்க்கைத் திறனை உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும் கடன் மூலம் மேம்பாடு என்ற கொள்கையை பிறருக்கு எடுத்துக் கூறி, ஊரக வளமைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளலாம். கிராம மக்களுக்கும், வங்கிக்கும் இடையே உழவர் மன்றம் பாலமாக அமையும். ஒரு கிராமத்துக்கு ஒரு உழவர் மன்றமே போதுமானது. குறைந்தபட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து, ஒரு உழவர் மன்றத்தை உருவாக்கி, சேவை வங்கியோடு இணைந்து செயல்படலாம். மேலும் உழவர்கள் தமது விவசாயம் சார்ந்த செய்திகளை பகிர்ந்து கொள்ளவும், ஊரக வளர்ச்சிக்கு உதவவும் 1982-ல் நபார்டு வங்கியால் உழவர் மன்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் செயல்பாட்டுக்கு நபார்டு வங்கி நிதி உதவி வழங்குகிறது என்றார்.
மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ப.லோகநாதன், முதன்மை வருவாய் அலுவலர் சீ.மலர்விழி, பொதுமேலாளர் என்.இளங்கோ, ஈரோடு சரக துணைப்பதிவாளர் ஜி.காந்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: உழவர் மன்றங்கள் துவக்க வலியுறுத்தல், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது