செவ்வாழைகளில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கலக்கம்
6:09 AM செய்திகள், செவ்வாழைகளில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கலக்கம் 0 கருத்துரைகள் Admin
குலசேகரம், டிச. 17: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் செவ்வாழைகளில் திடீர் நோய்த் தாக்குதல் (படம்) காரணமாக விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் முக்கிய விவசாயப் பயிராக வாழை உள்ளது. சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. நேந்திரன், செவ்வாழை, ரொபெஸ்டா, கதலி உள்ளிட்ட வாழைகள் அதிகமாகப் பரிடப்படுகின்றன. இங்குள்ள காலநிலை, நீர்ப்பாசன வசதி ஆகியவை வாழைக்கு சாதகமாக உள்ளன. இவ் விவசாயத்தை முக்கியத் தொழிலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாழை எனப்படும் துளுவன் வாழைகளில் திடீர் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு வாழைகள் ஒடிந்து விழுகின்றன. ஒரு தோட்டத்தில் சுமார் 30 சதம் என்ற அளவில் இந் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் முதலில் வாழையின் தண்டுப் பகுதியில் கோடுகள் விழுகின்றன. தொடர்ந்து தண்டுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, இறுதியாக இலைகள் ஒடிந்து சாய்கின்றன. மாவட்டத்தில் குலசேகரம் அருகே மலைவிளை உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட வாழைகள் உள்ளன.
செவ்வாழைகளை நட்டு பராமரித்து நேர்த்தியான அறுவடை செய்வதென்பது மிகவும் கடினமான செயல். இவ் வாழைகளுக்கு உரமிடுதல், நீர்ப் பாய்ச்சுதல், பூச்சிகொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்தில் செய்தால் மட்டுமே அதிக வருவாய் பெறமுடியும்.
இதுகுறித்து இப் பகுதியைச் சேர்ந்த விவசாயி பி. ஹென்றி கூறியதாவது:
செவ்வாழையில் அதிக அறுவடை என்பது மிகவும் கடினமான பணி. இதற்கு அதிக பொருள் செலவும், அதிக உழைப்பும் தேவை. தற்போது மலைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நன்றாக செழித்து வளர்ந்து வந்த செவ்வாழைகளில் திடீர் பாதிப்பு ஏற்பட்டு அவை விழுந்து விடுகின்றன.
இப் பாதிப்புக்குக் காரணம் நுண்ணூட்டக் குறைபாடா அல்லது நோயா எனத் தெரியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாய, தோட்டக் கலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

குறிச்சொற்கள்: செய்திகள், செவ்வாழைகளில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கலக்கம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது