இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தர்மபுரியில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு: கரும்பு அறுவடைக்கு இயந்திரங்கள் அறிமுகம்

தர்மபுரி: கரும்பு அறுவடைக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வசதியாக, அகலப்பார் முறையில் சாகுபடி செய்யுமாறு, விவசாயிகளுக்கு கரும்பு அலுவலர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். கூலியாட்கள் தட்டுப்பாடு காரணமாகவே, கரும்பு அலுவலர்கள், இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர். இது குறித்து தர்மபுரியை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் குணசேகரன் (பொறுப்பு) வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவு கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கரும்பு வெட்டுவதற்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வேலைக்கு வருவோரும் கூலி அதிகமாக கேட்பதால் கரும்பு சாகுபடி செய்வோருக்கு நஷ்டம் ஏற்படுகிறது.


அதனால், கரும்பு அறுவடைக்கு இயந்திரங்களை மாவட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் விவசாயிகள் என வலியுறுத்தினர். அதை ஏற்ற சர்க்கரை துறை கமிஷனர், தர்மபுரி கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு ஆலைக்கு இரண்டு கரும்பு அறுவடை இயந்திரம் வாங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, இரண்டு இயந்திரம் வாங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


முதற்கட்டமாக கரும்பு விவசாயிகளுக்கு, சாகுபடி நிலத்தில் கரும்பு வெட்டும் இயந்திரம் பயன்படும் முறை குறித்தும், இயந்திரங்கள் பயன்படுத்தி கரும்பு அறுவடை செய்ய வசதியான சாகுபடி முறை குறித்தும் கோட்ட வாரியாக அதிகாரிகள் செயல்விளக்கம் அளிக்க உள்ளனர்.இயந்திரங்களை பயன்படுத்த அகலப்பார் முறையில் ஐந்து அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்திட வேண்டும். தற்போது விவசாயிகள் இரண்டரை அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்கின்றனர். அவர்கள், ஒரு பாரிட்டு ஒரு பாரை எடுத்து மற்ற வரிசையில் இடைவெளி விட்டு அகலப்பார் முறையில் மாற்றி கரும்பு சாகுபடி செய்யலாம்.அகலப்பார் முறையில் சாகுபடி செய்வதற்கு, கோட்ட அலுவலகங்கள் மூலம் முன் அறிவிப்பு செய்து செயல்முறை பயிற்சி விளக்க கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அந்தந்த பகுதி கரும்பு விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.பயிற்சி விளக்க கூட்டங்கள் குறித்தும், சாகுபடி முறை குறித்த சந்தேகங்களையும் விவசாயிகள் கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.

கோபாலபுரம் ஆலைப்பகுதி தலைமை கரும்பு அலுவலர் குணசேகரனை 9442591234 என்ற மொபைல் எண்ணிலும், அரூர் வடக்கு கரும்பு அலுவலர் கதிரவனை 9442591222 என்ற எண்ணிலும், அரூர் தெற்கு கரும்பு அலுவலர் கேசவனை 9443407305 என்ற எண்ணிலும், மொரப்பூர் கரும்பு அலுவலர் ஞானப்பழனியை 9442591080 என்ற எண்ணிலும், பொம்மிடி கரும்பு அலுவலர் சரவணனை 9442591235 என்ற எண்ணிலும், பாப்பிரெட்டிப்பட்டி கரும்பு அலுவலர் விஜயகுமாரை 9442591259 என்ற எண்ணிலும், கோபிநாம்பட்டி கரும்பு அலுவலர் கோகிலாவை 9442591277 என்ற எண்ணிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.கரும்பு சாகுபடியில் கரும்பு அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவை செய்து அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகள், கரும்பு அலுவலர்கள் செயல்முறை பயிற்சி விளக்க கூட்டங்களில் கலந்து கொண்டு அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை கேட்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment