இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

புதுக்கோட்டை பகுதியில் நெல் பயிரில் கூண்டுபுழு, குருத்துப்பூச்சி திடீர் தாக்குதல்:கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை வழிமுறைகள்

புதுக்கோட்டை வட்டார பகுதியில் நெல் பயிரில் திடீர் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனை கட்டுப்படுத்த வழிமுறைகளை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.புதுக்கோட்டை வட்டாரத்தில் மொத்தம் 817 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் பயிர் தூர்கட்டும் பருவத்தில் உள்ளது. இதில் கூட்டுடன்காடு, குலையன்கரிசல் கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள நெல் பயிரில் கூண்டுபுழு மற்றும் குருத்துப்பூச்சி தாக்குதல் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசுந்தர் தலைமையில் வேளாண்மை அலுவலர் மார்டின்ராணி மற்றும் வேளாண்மைத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். உடனடியாக பூச்சிகள் தாக்குதலில் இருந்து நெல் பயிரை காப்பாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். இது குறித்து உதவி இயக்குநர் ஜெயசுந்தர் விவசாயிகளுக்கு தெரிவித்திருப்பதாவது; கூண்டுப்புழு நெல் பயிரில் உள்ள இலையின் திசுக்களை சுரண்டி உண்ணும். இதனால் வெண்மைநிற காகிதம் போல் இலைகள் மாறிவிடும். இலையின் மேல் பகுதியை சுருட்டி, பீடி கட்டுபோல் சிறிய துண்டுகளாக நெல் வயலில் தூர்களுக்கு அருகே காணப்பட்டால் கூண்டுபுழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பதை விவசாயிகள் உறுதி செய்து கொள்ளலாம்.



இந்த சிறிய பீடி துண்டு போல பச்சைநிற புழு இருக்கும் போது நீரில் மிதந்து கொண்டே ஒரு தூரில் இருந்து மற்றொரு தூருக்கு சென்று தாக்கிவிடும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு என்டோசல்பான் 400 மில்லி அல்லது மோனோபுரோட்டாபாஸ் ஏக்கருக்கு 200 மில்லி அல்லது குயின் ஆல்பில்ஸ் 400 மில்லி தெளிக்க வேண்டும். இவ்வாறு அடித்தால் அந்த பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம். இதே போல் குருத்துப்பூச்சிகள் தாக்குதலும் இந்த பகுதியில் நெல் பயிரில் காணப்படுகிறது. தாய் அந்துப்பூச்சி இலையின் அடியில் முட்டை இட்டு மஞ்சள் நிற முட்டை குவியல் தென்படும். முட்டையில் இருந்து புழுக்கள் வெளியேறி கீழ் நோக்கி நகர்ந்து தண்டின் அடிப்பகுதியில் துளையிட்டு நடுக்குறுத்தை தின்று விடுகிறது.



இதனால் குருத்து காய்ந்து காணப்படும். குருத்தை இழுத்தால் கையோடு வந்துவிடும்.கதிர் பருவத்தில் வெண் கதிராக காணப்படும். குருத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த மோனோபுரோட்டோபாஸ் 400 மில்லி அல்லது என்டோசல்பான் 400 மில்லி அல்லது குயின் ஆப்பாஸ் 400 மில்லி அல்லது பாஸ்போவிடான் 240 மில்லி அல்லது பெர்னோபாஸ் 400 மில்லி ஏக்கருக்கு அடிக்க வேண்டும்.அப்படி அடித்தால் இந்த பூச்சியை கட்டுப்படுத்தி நெல் பயிரை காப்பாற்ற முடியும். விவசாயிகள் பூச்சி தாக்குதலை உடனடியாக கடைபிடிக்க இந்த வழிமுறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment