இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தமிழக விவசாயம் இயந்திரமயமாகிறது : வேளாண் கருவிகளுக்கு மவுசு

கூலியாட்கள் பற்றாக்குறையால் தமிழக விவசாயம், இயந்திர மயமாகி வருகிறது. வேளாண் கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற விவசாயிகளுக்காக, வேளாண் கருவிகளை வாடகைக்கு விட துவங்கியுள்ளதால் இயந்திர மயமாவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



தமிழகத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 55 லட்சம் ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விவசாயத்தில் கூலி குறைவு, விவசாயக் கூலியாக இருப்பதை கவுரவ குறைச்சலாக கருதுவது போன்ற காரணங்களால் விவசாயத்தில் கூலியாட்கள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அதை சமாளிக்கவும், உணவு உற்பத்தியை பெருக்கவும், தற்போது நெல் நடவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளையும் குறைந்த செலவில் இயந்திரங்கள் மூலம் செய்து முடிக்க வேளாண் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் ஏழை விவசாயிகளே அதிகம் உள்ளனர். அவர்களால், வேளாண் கருவிகளை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது.



"கருவிகள் வாடகைக்கு கிடைத்தால் வாங்கி பயன்படுத்த வாய்ப்புள்ளது' என்பதால், தற்போது கிராமப்புற தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் கருவிகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாடகைக்கு விட நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், அக்ரோ சர்வீஸ் சென்டர் துவங்கி அதன் மூலம் தங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு வேளாண் கருவிகளை வாடகைக்கு விடுகிறது.இங்கு 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர், நடவு இயந்திரம், களையெடுக்கும் கோனாவீடர், பவர் வீடர், புல் வெட்டும் புஷ் கட்டர் உட்பட 12 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.இந்த கருவிகளை விவசாயிகள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்தலாம். விரைவில், மாநிலம் முழுவதும் முக்கிய வேளாண் கூட்டுறவு சங்கங்களும் வேளாண் கருவிகளை கொள்முதல் செய்து வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளன.



இது குறித்து கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் அசோகன் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, நவப்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கங்களில் அக்ரோ சர்வீஸ் சென்டர் துவங்கியுள்ளோம். அதுபோல மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக 100 சங்கங்களில் அக்ரோ சர்வீஸ் சென்டர் துவங்க உள்ளோம். அதற்கான சங்கங்களை தேர்வு செய்து விட்டோம். படிப்படியாக அனைத்து சங்கங்களுக்கும் வேளாண் கருவிகள் வழங்கப்படும். குறைந்த வாடகைக்கு கருவிகளை வாங்கி பயன்படுத்தலாம். வேளாண் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் நிலத்தில் நெல் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது. சாகுபடி செலவும் குறைவாக உள்ளது. வேளாண் கருவிகளை பயன்படுத்துவதால் விவசாயம் செய்வதை கவுரவக் குறைவாக நினைக்கும் இளைஞர்கள் கூட ஆர்வத்துடன் விவசாயம் செய்ய முன்வருவர்.இவ்வாறு அசோகன் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment