இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஏக்கருக்கு 10 மூட்டை குறைந்தது கோட்டூர் விவசாயிகள் கவலை

ஒன்றியத்தில் ஏக்கருக்கு 10 மூட்டைகள் வரை மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதால் கோட்டூர் ஒன்றியத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலேயே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்கப்பட்டது. இதனால் பல சிரமங்களுக்கு இடையே விவசாயிகள் சம்பா சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டனர். கோட்டூர் ஒன்றியத்தில் பி.பி.டி. ரக நெல் 23 ஆயிரம் ஏக்கரிலும், சி.ஆர்.(1009) 25 ஆயிரம் ஏக்கரிலும், ஆடுதுறை 39, ஆடுதுறை 38 ஆகிய நெல் ரகங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டது.50 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு பெய்த மழையால் பயிர்கள் நன்கு வளர்ந்து வந்தாலும் பூச்சி, நோய் தாக்குதல் காணப்பட்டது. மழை தொடர்ந்ததால் பல ஊர்களில் கதிர்கள் நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டது.

இதில் பி.பி.டி., ஆடுதுறை 38 போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட ஊர்களில் கடந்த சில நாட்களாக அறுவடை பரவலாக நடந்து வருகிறது. ஏக்கருக்கு 35 மூட்டை (60 கிலோ) முதல் 45 மூட்டை வரை மகசூல் வரும் என்று எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். காரணம் ஏக்கருக்கு 20 மூட்டை முதல் 25 மூட்டை வரை மட்டுமே மகசூல் ஆகி உள்ளது.கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு ஆள்பற்றாக்குறை உட்பட பல காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்த நிலையில் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் இயந்திரம் வாயிலாக அறுவடை பணி மேற்கொள்வதால் செலவு அதிகரிக்கிறது. மேலும் இயந்திரம் வைத்து அறுவடை செய்வதால் ஏக்கருக்கு 45 கட்டு முதல் 60 கட்டு வரை விவசாயிகளுக்கு வைக்கோல் கிடைப்பது பாதிக்கப்படுகிறது.



ஒரு கட்டு வைக்கோல் தற்போது 50 ரூபாய் விற்கிறது. ஏக்கருக்கு சுமார் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வைக்கோலில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானம் கிடைக்காமல் போய் விடுகிறது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பிபிடி சம்பா பயிரும், இம்மாத இறுதியில் அறுவடைக்கு வரும் 1009 ரக சம்பா பயிர்கள் பல ஊர்களில் வயல்களில் சாய்ந்துள்ளது. அறுவடை செய்த பயிர்களை களத்திற்கு கொண்டு வந்து கதிரடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அறுவடை மேற்கொண்டு நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. நெல் நிறம் மங்கலாக உள்ளது என்று விலையை குறைக்காமலும், வேறு தொகை வசூலிக்காமலும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment