ஈரோடு மாவட்டத்தில் மைசூர் சம்பா, 8ம் நெம்பர், 10ம் நெம்பர் உள்ளிட்ட ரகம் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். 8ம் நெம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்தில் அறுவடை பணி துவங்கி ஜனவரி மாதத்தில் மார்க்கெட்டுக்கு வரத்தாகும். தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் மஞ்சள் அறுவடை பணி துவங்கியுள்ளது. கர்நாடகா மாநிலம், சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியில் இருந்து பிப்ரவரி 15ம் தேதிக்கு மேல் புதிய மஞ்சள் வரத்தாகும். அதற்கு பின் புதிய மஞ்சள் சீஸன் வெகுவாக துவங்க ஆரம்பிக்கும். இரண்டு ஆண்டுக்கு முன் மஞ்சள் விலை அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வரை விலைபோனது. மஞ்சள் வியாபாரிகள் முதல் விவசாயிகள் வரை மஞ்சள் மூட்டைகளை தேக்கி வைத்தனர். ஆனால், கடந்தாண்டு மஞ்சள் எதிர்பாராத விலையாக குவிண்டாலுக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. மஞ்சள் விலையேற்றத்துக்கு முக்கிய காரணம் ஆன்-லைன் வர்த்தமே என வியாபாரிகள் தெரிவித்தனர். 2010 புத்தாண்டு துவங்கிய முதல் வாரத்தில் குவிண்டால் 11 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலைபோனது. அதற்கு அடுத்து வந்த பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மஞ்சள் விலை சராசரியாக 11 ஆயிரம் வரை விலை போனது. புதுமஞ்சள் வரத்தாகி கொண்டிருப்பதால், பழைய மஞ்சளின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது:மஞ்சளில் மைசூர் சம்பா, 8ம் நெம்பர், 10ம் நெம்பர் உள்ளிட்ட ரகங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் 8 ம் நெம்பர் மஞ்சள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும். மைசூர் சம்பா, 10 நெம்பர் மஞ்சள் போன்றவை பிப்ரவரி, மார்ச் மாதத்தில்அறுவடை செய்யப்படும்.
வழக்கமாக தை, மாசி மாதங்களில் தமிழகம் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் மஞ்சள் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது. மஞ்சள் சாகுபடி பரப்பளவு நடப்பாண்டில் அதிகரித்தாலும், தற்சமயம் மஞ்சள் வரத்து குறைந்து தான் உள்ளது. முன்பெல்லாம் சீஸன் துவங்கினால் நாளொன்றுக்கு 2,000 மூட்டைகள் வரும். அறுவடை செய்த மஞ்சளை விலையேறும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். புதிய மஞ்சள் வரத்தாகி கொண்டிருப்பதால் இனி வரும் நாட்களில், பழைய மஞ்சளின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் 100 சதவீதம் புது மஞ்சள் வரத்து முடிந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.