""கோவை தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் கள்ளுக்கு தடை நீக்காவிட்டால், டாஸ்மாக் கடைகளை நடத்தவிடாமல் போராட்டம் நடத்துவோம்,'' என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கள்ளுக்கு தடையை நீக்க கோரி, ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தேர்தலின் போது எங்களை கண்டு கொள்கின்றனர். அதன் பின் கண்டுகொள்வதில்லை.கேரளாவில் சத்யபானு கமிஷன் தனது அறிக்கையில், "கள் மது அல்ல உணவின் ஒரு பகுதி' என கூறியுள்ளது. "மாதத்தில் முதல்நாள் மதுக்கடைகளும், கள்ளுக்கடைகளும் மூட வேண்டும்' என அம்மாநில அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது, "அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், மேல்முறையீடு செய்தபோது, "கள் உணவின் ஒரு பகுதி என்பதால், மாநில அரசின் உத்தரவு பொருந்தாது' என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இது கேரள மாநிலத்துக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் பொருந்தும். அரசியல் சாசன சட்டத்தையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் தமிழக அரசு மதிக்கவில்லை.
டாஸ்மாக் கடைகளில் பனை, தென்னை சார்ந்த மதுவை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். கள்ளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு வழங்க வேண்டும். கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன், தடையை நீக்காவிட்டால், டாஸ்மாக் கடைகளை நடத்த விடாமல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.