ஈரோடு மாவட்டம் சத்தியில் நடந்த வாழை ஏலத்தில் கதளி விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சத்தி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வாழைத்தார் ஏலம் நடக்கிறது. சத்தியமங்கலம், பவானிசாகர், டி.ஜி., புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருவர். வழக்கத்தை காட்டிலும் நேற்று வாழைத்தார் வரவு அதிகமாக இருந்தது. ஆனால், விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இங்கு நடந்த ஏலத்தில் கதளி கிலோ 12 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று அதே கதளி ரகம் கிலோ ஏழு ரூபாய்க்கு மட்டுமே விலை போனதால் விவசாயிகள் விரக்தியடைந்தனர்.
அதே சமயம் சென்ற வாரம் கிலோ எட்டு ரூபாய்க்கு விற்பனையான நேந்திரம் நேற்று கிலோ 12 ரூபாய்க்கு விற்பனையானது. ""பொதுவாக இங்கு நடக்கும் ஏலத்தில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒன்றிரண்டு ரகங்களுக்கு மட்டும் விலையை உயர்த்திவிட்டு, மற்ற ரகங்களுக்கு விலையை வியாபாரிகள் குறைத்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது,'' என்று விவசாயிகள் குமுறினர்
தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்